"பெண்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்" என, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பேசினார்.
திருச்சி மாநகர போலீஸார் சார்பில் மாநகரில் பெண்கள் பாதுகாப்பு என்ற கருத்தரங்கம் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி, டி.சி.,க்கள் அபினவ்குமார், ஜெயந்தி, ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன், ஏ.சி., ஞானசிவக்குமார், வக்கீல் ஜெயந்திராணி, பேராசிரியர் மணிமேகலை, பாரதிதாசன் பல்கலை சமூகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெரிடா ஞானஜென் எல்ஜோ, செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் திருச்சி மாநகர பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். கருத்தரங்கை துவக்கி வைத்து, போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பேசியதாவது:
"நாட்டில் தற்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க போதுமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆயினும் எல்லா குற்றங்களையும் போலீஸால் தடுத்து விடமுடியாது. அதற்காகத்தான் மக்கள் மத்தியில் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வரவேண்டும் வலியுறுத்தப்படுகிறது.
பெண்கள், குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுவது பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாலே தான். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் அதிகளவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டுச்செல்ல வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் "ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றவர்கள்" என்று இருந்தாலும் பாலின வேறுபாட்டால் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு 64 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் ஐந்து பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் நண்பர்கள் மூலமாகவும் பெண்களுக்கு பாலியல் பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் நண்பர்களை தேர்வு செய்வதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்." இவ்வாறு போலீஸ் கமிஷனர் பேசினார்.
கருத்தரங்கில், ஈவ்-டீசிங், கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.
No comments:
Post a Comment