கடந்த, ஆறு ஆண்டுகளில், 5,000 யூனிட் ரத்தம் கொடுத்து, ஆயிரக்கணக்கானோரின் உயிர் பிழைக்க வைத்த மகத்தான சேவையை, திருச்சி தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் செய்துள்ளனர்.
திருச்சி மாநகரில் செயல்படும் கல்லூரிகளில் பழமையும், பெருமையும் வாய்ந்த கல்லூரிகளில், திண்டுக்கல் ரோட்டில் உள்ள தேசிய கல்லூரியும் ஒன்று. கலை அறிவியல் கல்லூரியான இங்கு, இளங்கலை மற்றும் முதுகலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்து வருகின்றனர்.மக்களிடம் ஏற்பட்டுள்ள, இன்ஜினியரிங் கல்லூரி மோகத்தால், மாணவர் சேர்க்கை குறையாத கல்லூரிகளில் தேசிய கல்லூரியும் ஒன்று. கல்லூரி என்றால் ஜாலி என்பது தான் மாணவர்களுக்கு நினைவுக்கு வரும்.
அப்படி ஜாலியான மாணவர்கள் சத்தமில்லாமல், பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களிடம் சமூக பொறுப்பை வலியுறுத்தும் வகையில், கல்லூரி செயலாளர் ரகுநாதன் அறிவுறுத்தல்படி, 2008ம் ஆண்டு, கல்லூரி முதல்வர் அன்பரசு, என்.சி.சி., விமானப்படை அலுவலர் சுந்தரராமன் முயற்சியால், முதன்முதலாக ரத்ததான கையேடு வெளியிடப்பட்டது.இதில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெயர், அவர்களது ரத்தவகை, முகவரி, மொபைல் எண், என்ன படிக்கின்றனர் என்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
அந்த ரத்ததான கையேடு, திருச்சி மாநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்பட்டால், மாணவர்களை அழைக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது. முதல் ஆண்டிலேயே, 600 யூனிட் ரத்தம் மாணவர்களால் அவசர தேவைக்கு கொடுக்கப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர்.
இதைப்பார்த்த கல்லூரி நிர்வாகம், ஆண்டுதோறும் கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களை, ரத்ததான பட்டியலில் சேர்த்து, அந்த கையோட்டை, ஆறு ஆண்டாக, தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அப்படி வெளியிட்டதன் மூலம், தேசிய கல்லூரி மாணவ, மாணவியர், கடந்த, ஆறு ஆண்டுகளில், 5,000 யூனிட் ரத்தம் கொடுத்து, பல ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சத்தமில்லா சாதனை குறித்து, ஆண்டுதோறும் ரத்ததானம் செய்யும் மாணவ, மாணவியரின் கையேட்டை வெளியிட்டு வரும், கல்லூரி பேராசிரியர் சுந்தரராமன் கூறியதாவது: கல்லூரியில் ஆண்டுக்கு, மூன்று ரத்ததான முகாம் நடத்தி, 300 யூனிட் ரத்தம் அளிக்கிறோம். அவசரத்துக்கு மருத்துவமனையிலிருந்து வரும் அழைப்புகளுக்கு, 300 முதல், 400 மாணவர் வரை, ரத்ததானம் செய்து வருகின்றனர்.கடந்த, ஆறு ஆண்டுகளில், 5,000 யூனிட்டுக்கு மேல், எங்கள் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்துள்ளனர். இதன்மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.ரத்ததானம் செய்வதை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விழா நடத்தி, ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கி வருகிறோம். இது மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றும் முயற்சியும் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.
1 comment:
It will very useful, if add all blood donors name, address, phone No., and grooping by opening a WEB PAGE.
Post a Comment