புதுவை அரும்பார்த்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பள்ளியில் இருந்த கம்ப்யூட்டரில் ஆபாச படம் காண்பித்ததாக பள்ளி ஆசிரியர்கள் ஜூட் அன்பழகன், சிவக்குமார், அப்துல் மாலிக், ரவீத் முகமது உள்ளிட்ட 4 பேர் மீது புகார் எழுந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளியில் இருந்து 4 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர் வல்லவன் இதுகுறித்த துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து 4 ஆசிரியர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் மீதான இந்நடவடிக்கை போதுமானது இல்லை எனக்கூறி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 4 ஆசிரியர்கள் மீதும் சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி புதுவை தலைமை அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி முருகன் விசாரித்தார். புகாருக்கு ஆளான ஆசிரியர்கள் 4 பேருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மேலும் 4 பேரும் மறு உத்தரவு வரும் வரை மாஹி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையும் விதித்தார்.
No comments:
Post a Comment