சிதம்பரம் பகுதி அரசு ஊழியர்களுக்கு, அரசு அறிவித்த, பொங்கல் போனஸ், பண்டிகை முடிந்து தாமதமாக கிடைத்தாலும், 3,000 ரூபாக்கு பதில், 6,000 ரூபாயாக, வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் சார் நிலை கருவூலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டதாலும்; பொங்கலையொட்டி, தொடர் விடுமுறை விடப்பட்டதாலும், சிதம்பரம் பகுதி அரசு ஊழியர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு முன், போனஸ் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிதம்பரம் தாலுகா பகுதியில் உள்ள, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 80 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு, நேற்று முன்தினம் பொங்கல் போனஸ் போடப்பட்டுள்ளது.இதில், சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும், "சி' பிரிவு ஊழியர்கள், 14 பேருக்கு போனஸ் தொகை, 3,000 ரூபாக்கு பதில், 6,000 ரூபாய், அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தங்கள் கணக்கில் உள்ளதால், தாராளமாக எடுத்து செலவு செய்தும் வருகின்றனர். இந்த இரட்டிப்பு போனசுக்கு காரணம், பள்ளியில் இருந்து அனுப்பிய பட்டியலில் நடந்த தவறா அல்லது கருவூலத்தில் நடந்த தவறா என, தெரியவில்லை. தீபாவளி முன்பணம் போன்றவற்றுக்கு, ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கருவூலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், போனஸ் வழங்குவதற்கு அவ்வாறின்றி, பில் அடிப்படையில், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இதனால், போனஸ் வழங்குவதில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. பள்ளிக்கு தொடர் விடுமுறையாக இருப்பதால், மற்றவர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைத்துள்ளது என்பது குறித்த, விவரம் தெரியவில்லை. சிதம்பரம் சார் நிலை கருவூலத்தில், தொடர்ந்து இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment