இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
நாட்டில் மொத்தம் 44 மத்திய பல்கலைகள் உள்ளன. இந்த புதிய முடிவு, கடந்த 2009ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 12 மத்திய பல்கலைகளில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. ஏனெனில், இப்பல்கலைகளுக்கு, 5 ஆண்டுகள் பதவி காலத்திற்கு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் அனைவரின் பதவி காலமும், 2014ம் ஆண்டு மார்ச் 1ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, ஓய்வுபெறும் அவர்கள், வயது காரணமாக மீண்டும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
முந்தைய ஆண்டுகளில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 70 வயதை அடைந்தவுடன் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன், துணைவேந்தர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது வயது கட்-ஆப் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒவ்வொரு துணை வேந்தரும் தங்களின் 5 ஆண்டு பதவி காலத்தை பிரச்சினையின்றி நிறைவுசெய்ய முடியும். இதன்மூலம், தாங்கள் செய்ய நினைத்ததையும் மேற்கொள்வதற்கான காலஅவகாசம் கிடைக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவும், எதிர்ப்பும்...
இந்த புதிய முடிவிற்கு, எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத சில மத்திய பல்கலைகளின் துணைவேந்தர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதாவது:
இந்த புதிய முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், வெறும், 3 அல்லது 4 ஆண்டுகள் வாய்ப்பு கிடைப்பதால், ஒரு துணைவேந்தர், கல்வி நிறுவன கட்டுமானத்தில் கவனம் செலுத்திவிட முடியாது.
உதாரணமாக, மாநில பல்கலைகளில், 3 வருடங்களுக்கு துணைவேந்தர் பதவி பெற்றவர்கள், தங்களின் முதல் வருடத்தில், பல்கலைக்கழக அமைப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். இரண்டாம் ஆண்டில், சில நல்ல பணிகளை மேற்கொள்ள துவங்குகிறார்கள். மூன்றாமாண்டில், பதவி நீட்டிப்பு பெற முயல்கிறார்கள். இதுதான் நடக்கிறது என்கின்றனர் இந்த முடிவை ஆதரிப்பவர்கள்.
இதை எதிர்ப்பவர்கள் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். "இந்த புதிய முடிவால், தற்போது மத்திய பல்கலைகளில் பதவியில் இருக்கும் துணை வேந்தர்களில், பாதி அளவினர், மீண்டும் பதவி நீட்டிப்பு வாய்ப்பினை பெற முடியாது. புதிதாக அமைக்கப்பட்ட 12 மத்திய பல்கலைகளில், பெரும்பாலானவற்றுக்கு நிலையான வளாகங்கள் இல்லை.
எனவே, அவற்றின் துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்பு பெற்றால், நிலையான வளாகம் அமைக்கும் பணியை கவனம் செலுத்தி நிறைவுசெய்ய முடியும்" என்பது அவர்களின் கருத்து.
No comments:
Post a Comment