கூடலூரில், கூடுதலாக வசூல் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
"கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள புனித அந்தோணி மெட்ரிக் பள்ளியில், அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது" என, மாநில தனியார் மெட்ரிக் பள்ளி கல்வி கட்டண குழுவுக்கு புகார் செய்தனர்.
இது தொடர்பாக, சென்னை கல்விதுறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன், கோவை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மனோகரன், கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய கல்வி கட்டண ஆய்வு குழுவினர், குறிப்பிட்ட பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், "கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பதும், தேவையின்றி மாணவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளது" தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, "கூடுதலாக பெற்ற கட்டணம், மாணவர்களிடம் வசூல் செய்த அபராத தொகையை பெற்றோர்களிடம் திரும்பி கொடுக்க வேண்டும்; குழு பரிந்துரை செய்துள்ள கல்வி கட்டண விபரத்தை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்" என, பள்ளி நிர்வாகத்துக்கு, சிறப்பு குழு உத்தரவிட்டது.
இந்த குழுவிடம் சில பெற்றோர் கூறுகையில், "கூடலூரில் பல பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றன. அப்பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கான ஆதாரபூர்வமான கடிதங்களை அனுப்புகிறோம்" என்றனர். "ஆதாரபூர்வமாக கடிதங்களை அனுப்பினால், குறிப்பிட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு பணிகள் நடக்கும்" என, அதிகாரிகள் உறுதி அளித்து சென்றனர்.
No comments:
Post a Comment