சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் 1ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர். இதுகுறித்து தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சம் வரை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும், 6வது ஊதியக்குழு பரிந்துரைகளை திருத்தியமைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27 ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'ஜாக்டோ' என்ற அமைப்பு ஆகஸ்ட் 1ம் தேதி சென்னையில் தொடர் முழுக்க போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் போராட்டம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களின் ரியாக் ஷன் இதோ.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: அ.தி.மு.க. அரசாங்கமே செயல்படாம முடங்கி கிடக்கு. உங்க போராட்டத்துல வந்து நான் பேசுறேன். நான் வந்து பேசுறதால அரசு உங்க கோரிக்கையை நிறைவேற்றலைன்னு சொன்னா. என்னை நீங்க கோவிச்சுக்க கூடாது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்:ஆசிரியர் சங்க நிர்வாகிங்க இவ்வளவு பேர் வந்திருக்கீங்க. அதோடு மீடியாவும் நிறைய வந்திருக்கு. தி.மு.க. கிட்ட வந்துட்டதால உங்களுக்கு நெகட்டிவ்வாக போயிடப்போகுது. பார்த்துக்கங்க. ஆனா எங்க ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:அ.தி.மு.க. ஆட்சியில் அரசாங்கமே செயல்படலை. இதுல அந்த அம்மா கல்வித்துறையை மட்டுமா கண்டுக்க போறாங்க. உங்க கோரிக்கைகள் பற்றி எழுதி கொடுத்துட்டு போங்க. நான் படிச்சு பார்த்துட்டு போராட்டத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அறிக்கை விடுறேன். ராகுல்காந்தி 23ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அதனால கொஞ்சம் பிசியாக இருக்கேன். முடிஞ்ச அளவு போராட்டத்துக்கு வர்றேன்.
பா.ம.,க. தலைவர் டாக்டர் ராமதாஸ்: இந்த அம்மா டாஸ்மாக் மதுபானக்கடையை திறந்து வச்சுக்கிட்டு பள்ளிக்கூட மாணவர்களை கூட மதுவுக்கு அடிமையாக்கிட்டாங்க. இப்படியே போனா தமிழ்நாடு குடிகார நாடாக போயிரும். உங்க கோரிக்கை சம்மந்தமாக ஏற்கனவே வாத்தியாராக இருந்த எங்க ஜி.கே.மணிக்கிட்ட கலந்துக்கிட்டு அறிக்கை விடுறதோடு, கண்டிப்பாக போராட்டத்துக்கு வர்றேன்.
கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: உங்க கோரிக்கைகள் நியாயமானதுதான். ஆனா, பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நிறைய சம்பளம் வாங்கிக்கிட்டு ஒழுங்காக வேலை செய்யுறதில்லைன்னு ஒரு எண்ணம் இருக்கு. முதலில் அந்த எண்ணத்தை மாத்துறது மாதிரி உங்க நடவடிக்கைகள் இருக்கணும். பொதுமக்கள் மனசுல இருக்கிறதை புரிஞ்சுக்கிட்டு உங்க கடமையை ஒழுங்காக செய்யுங்க. உங்க போராட்டத்துக்கு எங்க ஆதரவு நிச்சயம் உண்டுன்னு சொல்லி அட்வைஸ் செஞ்சு அனுப்பினாராம்.
இதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.
தே.மு.தி.,க. தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு ஜாக்டோ அமைப்பினர் கடிதம் கொடுத்துள்ளார்களாம். கேப்டன் இப்போ ரொம்ப பிசின்னு தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லியிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment