சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது .இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையில் குப்பன், ராஜா, முருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் குப்பனும், ராஜாவும், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கே.கே. நகர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முருகன் பணியாற்றி வந்துள்ளார். 10–ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் பிளஸ்–2 சான்றிதழையும், ஆசிரியர் பயிற்றி சான்றிதழையும், ரூ.30 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குப்பன் ரூ.25 ஆயிரம் கொடுத்தும், ராஜா ரூ.15 ஆயிரத்துக்கும் போலி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள். இவர்கள் தவிர இன்னும் 5–க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த 1998–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித தங்கு தடையுமின்றி பணியாற்றி வந்திருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக சம்பளத்துடன் சேர்த்து அரசின் அத்தனை சலுகை களையும் பெற்று வந்த இந்த போலி ஆசிரியர்களை, மொட்டை கடிதம் ஒன்றே சிக்க வைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– 2011–ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு திருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சா புரத்தில் இருந்து பெயர் இல்லாமல் மொட்டைக் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் 58 ஆசிரியர்களின் பெயர், முகவரி, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் கடிதத்தில் இடம் பெற்றிருந்தது. மாநகராட்சி அதிகாரிகள், மொட்டை கடிதம்தானே என அதனை அலட்சியம் செய்யாமல் அதுபற்றி விசாரிக்க மாநகராட்சி 'விஜிலென்ஸ் கமிட்டி 'க்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 58 ஆசிரியர்களின் பட்டியலும் பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கல்வி துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் 10 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோரது தலைமையில் சப்– இன்ஸ்பெக்டர்கள் மேரிராணி, கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி குப்பன், ராஜா, முருகன் ஆகிய போலி ஆசிரியர்களை பிடித்துள்ளனர். போலீசாரின் வலையில் இன்னும் 5–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது. மாநகராட்சி பள்ளிகளில் புயலை கிளப்பியிருக்கும் இந்த போலி ஆசிரியர்கள் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ‘மொட்டை கடித ஆசாமி’ யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் அவர் யார்? என்பதே தெரியவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment