தேர்ச்சியில் பின்தங்கிய அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவிகள் செய்ய தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டுமென விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: "மாவட்டத்தில் தேர்ச்சியில் பின்தங்கிய அரசு பள்ளிகளை சென்னை ஜே.கே., பவுண்டேஷன் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் தத்தெடுத்துள்ளது. கடந்தாண்டு 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி உள்ள 20 பள்ளிகளை தத்தெடுத்து உதவிகள் வழங்கி, கூடுதலாக 20 சதவீதம் தேர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த பவுண்டேஷன் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புதல், மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கல், மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தாண்டு, அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்குகிறது. தற்போது, ஒவ்வொரு பள்ளியிலும் பொது தேர்வு மாணவர்கள் 3 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 6 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு வரும் 25 முதல் 30ம் தேதி வரை ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வியில் பின்தங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கு டிச., 25 முதல் 30 வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 20 முதல் 30 வரை ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜே.கே., பவுண்டேஷன் போன்று அனைத்து தொண்டு நிறுவனங்களும் தேர்ச்சியில் பின்தங்கிய பள்ளிகளை தத்தெடுத்து உதவிகள் வழங்கினால், மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment