திருவள்ளுவர் பல்கலையில், பணி நியமன முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்தது. வேலூர், திருவள்ளுவர் பல்கலையில், 2010- 11ம் ஆண்டு துணைவேந்தராக ஜோதிமுருகன் இருந்தார். அப்போது, 7 பேராசிரியர்காள், 3 இணை பேராசிரியர்கள், 11 உதவி பேராசிரியர்கள் உட்பட, 31 பேர் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, பல்கலை பேராசிரியர்கள் சங்க தலைவர் பேராசிரியர் இளங்கோவன் உட்பட பலர், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.
கடந்தாண்டு, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கு சென்று, ஆவணங்களை எடுத்து வந்து சரி பார்த்தனர். பல்கலையில் பணிபுரியும், 32 பேரிடமும் விசாரணை நடத்தினர். கடந்தாண்டு டிசம்பர், 14ம் தேதி, ஜோதி முருகன் பதவியை ராஜிமானா செய்தார். இந்நிலையில், பல்கலையில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், கடந்த, மே மாதம் முதல், மீண்டும் விசாரணை நடந்தது.
பல்கலை தேர்வுக் குழு பணியாளர்கள், பணி நியமனம் பெற்றவர்கள், பேராசிரியர்கள் என, 220 பேரிடம் விசாரணை நடந்தது. ஐந்து மாதமாக நடந்த விசாரணை, நேற்றுடன் முடிந்தது. இது குறித்து, விரிவான அறிக்கை தயார் செய்து, மேலிடத்துக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுப்பி உள்ளனர். அங்கிருந்து வரும் தகவலை பொறுத்து, கைது படலம் துவங்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment