தமிழக அரசு நடத்தும், முதல் ஆசிரியர் தகுதித்
தேர்வு, 12ம் தேதி நடக்கிறது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
1,027 மையங்களில், தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு
வீச்சில் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக, டி.ஆர்.பி., தலைவர்
சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
அவர்,
நிருபர்களிடம் கூறியதாவது:ஆசிரியர் தகுதித் தேர்வு, 12ம் தேதி (நாளை)
நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியர்), பிற்பகலில்
இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியர்) நடக்கிறது. இலவச மற்றும்
கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, இரு தேர்வுகளுமே, தலா 150 மதிப்பெண்களுக்கு
நடக்கும்.
இத்தேர்வை, 1.81 லட்சம் ஆண்கள் மற்றும் 4.74
லட்சம் பெண்கள் என, 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். 1,027 மையங்களில்
தேர்வுகள் நடக்கின்றன. பணிபுரியும் ஆசிரியர்களும் தேர்வில் பங்கேற்கும்
வகையில், 12ம் தேதி, அனைத்துப் பள்ளிகளுக்கும், தமிழக அரசு விடுமுறை
அறிவித்து உள்ளது.
தேர்வுப் பணியில், 55,339 பேர்
ஈடுபடுகின்றனர். 3.61 கோடி ரூபாய் செலவில், இத்தேர்வு நடத்தப்படுகிறது.
எட்டு லட்சம் விடைத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பத்தில்,
மொழித்தாள் பாடத்தை தவறாக குறிப்பிட்டவர்கள், விடைத்தாளில் சரியான மொழிப்
பாடத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும். பெயரில் பிழை இருந்தால்,
சம்பந்தபட்ட தேர்வர், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, விவரத்தை
தெரிவிக்கலாம். அசல் சான்றிதழ்களை காட்டி, பெயரில் பிழை இருந்தால் சரி
செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்த
அனைவருக்கும், "ஹால் டிக்கெட்" அனுப்பப்பட்டன. இணையதளத்தில் இருந்தும்,
பதிவிறக்கம் செய்யலாம். "ஹால் டிக்கெட்" கிடைக்கவில்லை என புகார்
தெரிவித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, 323 பேருக்கு, "ஹால்
டிக்கெட்" வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேர்வுக்கான விடைகளை விரைவில் வெளியிடவும்,
தேர்வு முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளோம்.
தேர்வுப் பணிகளை கண்காணிக்க, ஐந்து அதிகாரிகளை நியமித்து உள்ளோம். இவ்வாறு
சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
தேர்வில் பங்கேற்கும் பார்வையற்றவர்களில்,
முதல் தாள் தேர்வை, 1,291 பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 2,094 பேரும்
எழுதுகின்றனர். இரு தேர்வுகளையும், 171 பேர் எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment
IF ANY SUGGESTION KINDLY REGISTER YOUR COMMENTS IN COMMENT BOX