முதல் முறையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், பல்வேறு தடைகளைத் தாண்டி, தமிழகம் முழுவதும், 10,312 பள்ளிகளில் இருந்து, சுமார் 10.84 லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
இதில், ஐந்து லட்சத்து, 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்கள்; ஐந்து லட்சத்து, 38 ஆயிரத்து 868 பேர் மாணவியர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், நேரடி தனித்தேர்வு மூலம், 19 ஆயிரத்து 574 பேர் எழுதுகின்றனர். 3,033 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன.
பறக்கும் படை: பிளஸ் 2 தேர்வுக்கு, 4,000 உறுப்பினர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், இத்தேர்வுக்கு, 8,000 பேர் அமைக்கப்பட்டு உள்ளதாக, இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். சென்னை நகரில், பள்ளிகளிலிருந்து மட்டும், 58 ஆயிரம் பேரும்; புதுச்சேரியில் இருந்து, 260 பள்ளிகளில் இருந்து, 18 ஆயிரத்து 116 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தொடர் சோதனைகள் : பள்ளி திறப்பு தாமதம்; சமச்சீர் கல்வி திட்டமா, பழைய பாடத்திட்டமா என்பதில் இழுபறி; ஒரு வழியாக சமச்சீர் கல்வி திட்டம் அமல்; பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் அவதி; வகுப்புகள் துவங்குவதில் தாமதம் என, வரிசையாக பல்வேறு சோதனைகளுக்கு மாணவர்கள் ஆளாகினர்.
இதனால், தேர்வுக்கு தயாராகும் வகையில், ஏப்., 15க்கு பிறகே தேர்வு நடைபெறும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், வழக்கமான தேர்வு அட்டவணையில் இருந்து, ஒரு வாரம் மட்டுமே தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் 4ம் தேதி துவங்கும் தேர்வு, 23ம் தேதியுடன் முடிவடைகிறது.
52 பேர் கைதிகள்
தேர்வெழுதுபவர்களில், 52 பேர் கைதிகள். சென்னை புழல் சிறையில் உள்ள இவர்கள், தனித்தேர்வு மூலம், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment