ஒன்றிய ஆரம்பப் பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. மீஞ்சூர், ராமரெட்டிபாளையம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது, 38 மாணவர்களுடன் உள்ள இங்கு, 2015 - 16ம் ஆண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், அதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரம், பள்ளி தலைமை ஆசிரியர் மாலினி தலைமையில் நடந்தது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முனிராஜசேகர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் சுப்ரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முரசு சத்தம் எழுப்பியபடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ராமரெட்டி பாளையம், கக்கன்ஜி நகர், ராஜம்மாள் நகர் ஆகிய பகுதிகளில், பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரசாரத்தின்போது, கல்வி பெறும் வயதில் பணியை சுமக்க வைக்காதே, அரசு வழங்கும் ஆங்கிலவழி கல்வியில் பயின்று, பயன் பெறுவீர், திறன்களை வெளிப்படுத்தும் இடம் அரசு பள்ளி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, மாணவர்கள் சென்றனர்.
வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்படுவது குறித்து, பகுதிவாசிகளுக்கு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment