தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக என்.சி.ஆர்.டி. நாடு முழுவதும் தேர்வு நடத்துகிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வு பிப்ரவரி 26-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் என்ன, நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இது வேறுபடுகிறதா, பொருளாதார ரீதியில் நலிவடைந்த, நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் இதில் வேறுபாடு உள்ளதா, மாணவர்களுக்கும், மாணவியருக்கும் கற்றலில் எத்தகைய வேறுபாடுகள் உள்ளன போன்ற விவரங்கள் சோதிக்கப்பட்டன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவை இணைந்து இந்தத் தேர்வை 354 பள்ளிகளில் நடத்தின.
மொத்தம் 90 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. இத்தேர்வு முடிவுகள் நேரடியாக என்.சி.இ.ஆர்.டி.க்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களின் தேர்வு முடிவுகளோடு சேர்த்து இந்த முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment