ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாக, டி.ஆர்.பி.,யின் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பில் குழப்பம், இறுதிப் பட்டியலில் குளறுபடி, நேர்முகத் தேர்வில் பாரபட்சம் என, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சந்தேகம்
ஆனால், தமிழக கல்வித்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளதால், வேளாண்துறை போல், முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
* ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என டி.ஆர்.பி.,க்கு எதிராக, மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
* இதேபோல், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இதற்கு, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
* மற்றொரு பிரச்னையாக, போலி ஜாதி சான்றிதழ் கொண்டு வந்தவரை, டி.ஆர்.பி., தேர்வு செய்ததும், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவர், முன்னுரிமைக்காக போலி ஜாதி சான்றிதழ் கொடுத்துள்ளார். அதை சரிபார்க்காமல், ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராஹுல் நாத் ரத்து செய்துள்ளார். ஆனால் நியமனத்தை, இன்னும் டி.ஆர்.பி., ரத்து செய்யவில்லை.
* அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி.,யில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பாடவாரியாக நேர்முகத் தேர்வுகள் அறிவித்து, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதில், இறுதி மதிப்பெண் பட்டியலில், வரலாறு பாடத்துக்கு, ஒருவரை மட்டும் டி.ஆர்.பி., தேர்வு செய்துள்ளது. ஆனால் டி.ஆர்.பி., அறிவித்த நபரின் பெயர், நேர்முகத் தேர்வு அழைப்பில் இடம் பெறவில்லை. அவருக்கு தனியாக நேர்முகத் தேர்வு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறைமுக நடவடிக்கை
பணி நியமன விதிகளின்படி, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அறிவிக்கப்பட்ட பின், யாரையும் தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்க முடியாது. அதனால், அரசியல் கட்சிகளின் சிபாரிசு, அதிகாரிகளின் பரிந்துரை என, மறைமுக நடவடிக்கை அதிகரித்துள்ளதோ என்று, பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
* கடந்த வாரம், கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவைகள், கலப்புத் திருமணம் புரிந்தோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடுகளை டி.ஆர்.பி., பின்பற்றவில்லை என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இறுதிப் பட்டியலை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், இறுதிப் பட்டியலை அவசர அவசரமாக, கல்வித்துறைக்கு அனுப்பி விட்டனர். பின், கல்வித்துறை சுதாரித்து, 133 கணினி ஆசிரியர் கவுன்சிலிங்கை நிறுத்தி வைத்தது.
மிரட்டல் புகார்
டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, மனிதத் தவறுகள் நடக்கத்தான் செய்யும்; அதை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். ஒரு சில உயரதிகாரிகளுக்கு டி.ஆர்.பி.,யில் உள்ள கட்சி சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளின் மிரட்டல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment