சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நாளை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 'விடுமுறை' அறிவித்துள்ளன. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நாளை தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இயங்காது, விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது என்பது அரசின் பணி. அதை தனியாரே கையில் எடுத்திருப்பது சரியானது அல்ல; அத்துடன் இத்தகைய பள்ளி, கல்லூரிகளின் உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment