ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு கல்வித்துறை அமைச்சர் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாறுதல் வழங்குவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது ஒரு மாவட்டத்துக்கு ஓரு ரேட் என்ற அடிப்படையில் பணியிட மாறுதலுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியல் ஒளிவு மறைவற்ற முறையில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது கவுன்சலிங் நடத்துவதாக கூறிவிட்டு, முக்கிய மாவட்டங்களில் உள்ள இடங்களை மறைத்துவிடுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் மறைக்கப்பட்ட இடங்கள் அதிக பணம் கொடுப்போருக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதையடுத்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பாக உண்மையான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும். மே மாதத்தில் நடத்தப்பட வேண்டிய கவுன்சலிங்கை முறையாக நடத்தி ஒளிவு மறைவு இன்றி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அப்படி அல்லாமல் மறைக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங் நடத்தினால் அந்த மையங்களில் ஆசிரியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மே மாதம் பணியிட மாறுதல் கவுன்சலிங் குழப்பம் இன்றி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment