நாடு முழுவதும் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து கணக்கெடுப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது :
ஏற்கெனவே நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் இந்த கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. இப்பணி தொடர்ந்து 40 முதல் 45 நாட்கள் வரை நடைபெறும்.
இதில் நகரப்பகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள், பில் கலெக்டர்களும், கிராமப் புறங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களும் ஈடுப்படுவார்கள். அதேபோல் விருப்பத்தின் பேரில் ஆசிரியர்களையும் இப்பணிகளில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இவர்களுடன் கணினி குறித்து நன்கு அறிந்தவர்களும் பயன்படுத்தபடுவார்கள். அவர்கள் கையளவு கணினி கொண்டு வீடுவீடாக சென்று மக்களின் விவரங்களை சேகரித்து அங்கேயே பதிவு செய்வார்கள்.
மேலும் இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநிலம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேருராட்சி அலுவலகங்களில் தற்போது மும்முரமாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment