விழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை வள்ளி. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வள்ளி,34. 5 வயதுவரை சக பெண் குழந்தைகளுடன் ஓடி, சாடி விளையாடிய வள்ளியை திடீரென்று அம்மை நோய் தாக்கியது.
கண் வலி அதிகரிக்கவே இவரது தாயார் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்காமல் மருந்துகடையிலிருந்து வாங்கிய சொட்டு மருந்தை வள்ளியின் கண்ணில் விட்டுள்ளார். விளைவு இரண்டு கண்ணும் பார்வை பறிபோனது. மனம் தளராத வள்ளி பள்ளி படிப்பை பாளையங்கோட்டை மேரி சார்ஜன் பெண்கள் பள்ளியில் முடித்தார். பட்டப் படிப்பை மதுரையில் உள்ள கல்லூரியில் முடித்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் அப்பாத்துரை. இவரும் பார்வை இழந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டி.ஆர்.பி., தேர்வு மூலம் ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 6 மாதமாக பணியாற்றி வருகிறார். பாடங்களை மணிக்கணக்கில் நடத்தினாலும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உரிய விளங்கங்களுடன் அவர்களது மனதில் பதியவைக்கிறார். மாணவிகளின் துணையோடு வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்கிறார்.
ஆசிரியர் வள்ளி கூறியதாவது: நான் 5 வயது சிறுமியாக இருக்கும் போது, அம்மை நோய் தாக்கியது. தவறுதலாக சொட்டு மருந்தை எனது கண்ணுக்குள் அம்மா விட்டு விட்டார். அதன் விளைவாக கண் பார்வை பறிபோனது. பெற்றோர்களின் முயற்சியால் சிறப்பாசிரியர்கள் மூலம் எனது கல்விக்கான தீபத்தை விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனும் திரியால் சுடர் ஏற்றினேன். தற்போது மாணவர்களுக்கு பாடத்துடன், எளிதில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையையும் ஊட்டி வருகிறேன். இளமையில் கற்கும் அடித்தள மான கல்வியே, உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் மகுடமாக திகழ்கிறது. தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு, எனது நிலையை பார்க்க செய்து தூண்டுகோலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.