Pages

Thursday, November 21, 2013

ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை

தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (2009) அமல்படுத்தியது. இதன்படி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தகுதித் தேர்வு நடத்துகிறது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன.


தகுதித் தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த பின்னும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமித்து வந்தனர். அவர்களின் நியமனத்திற்கு கல்வித்துறை ஒப்புதல், சம்பளம் வழங்கியது. தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் நவ.,7 ல் பிறப்பித்த உத்தரவு:
 
தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கப் பெறாததால், சில நிபந்தனைகள் அடிப்படையில், தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலிப் பணியிடங்களில் நிரப்பிக்கொள்ளலாம் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. தகுதித் தேர்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை (181- 2011 நவ.,15) வெளியான பின், நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களின் பணிநியமனம் ரத்து செய்யப்படுகிறது.
 
அதன் பின் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதை எதிர்த்து இளையாங்குடி அருகே சாலையூர் ஹமீதியா மேல்நிலை பள்ளி தாளாளர், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணிய சிவா உட்பட சிலர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
 
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்.,1 முதல் அமலானது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியமனத்தை ரத்து செய்வது சரியல்ல. பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
 
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன்லால், லஜபதிராய், லூயிஸ் ஆஜராகினர்.

நீதிபதி: 2012 ஆக.,26 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவிற்கும், பள்ளிக் கல்வி இயக்குனரின் உத்தரவிற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.