"மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும்" என உடுமலையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
தினமலர் டி.வி.ஆர்., அகாடமி, கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டியூசன் நிறுவனம் சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நேற்று உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் துவங்கியது.
முதல் நாளான நேற்று பத்தாம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்காக கோவை ஜி.ஆர்.ஜி., மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய "டிப்ஸ்"
கலைச் செல்வி (தமிழ்): தேர்வில், எழுதும் போது, அடித்தல் திருத்தலின்றி, கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். வார்த்தைகளுக்கு இடையேயும், வாக்கியங்களுக்கிடையேயும் போதிய அளவில் இடம் விட்டு எழுத வேண்டும். வினாக்களுக்கு விடையளிக்க நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும்.
கடைசி 10 நிமிடம் எழுதியதை சரிபார்க்க வேண்டும். வினாக்குறியீடுகள் முக்கியமானதால், சரியாக குறிப்பிட வேண்டும். எந்த வினாவிற்கு விடை எழுதுகிறமோ அந்த வினா எண் மற்றும் அதற்குரிய விடையை எழுத வேண்டும். வினாவின் முக்கிய விடைகளுக்கு அடிக்கோடிட்டும்; கருப்பு மையால் தனியாக எழுதியும் தெளிவாக தெரிந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். திருக்குறள் மற்றும் பாடல் வினாக்களுக்கு பாடல் வரிகளை எழுதி விடையளித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
தமிழ் இரண்டாம் தாளில், இலக்கணம், துணைப்பாடம், கடிதம், கட்டுரை, மொழிப்பயிற்சி, இடம் பெறுகிறது. இரண்டாம் தாளில், அதிக மதிப்பெண்கள் பெற பாடத்திலுள்ள மாதிரி வினாக்களையும், இலக்கண பகுதிக்கு உள்ளே இருந்தும் படிக்க வேண்டும். பா வகை, அணி இலக்கணம், அலகிட்டு வாய்ப்பாடு நன்றாக படித்துக்கொண்டால் முழுமையான மதிப்பெண் பெறலாம்.
துணைப்பாடம் எழுதும் போது, முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரை என்று பிரித்து எழுதினால் மட்டுமே முழுமையான மதிப்பெண்கள் கிடைக்கும்.
கட்டுரையில் முழு மதிப்பெண் பெற முன்னுரை, பொருளுரை, உட்தலைப்புகள், மேற்கோள்கள், முடிவுரை அவசியம் எழுதுதல் வேண்டும். மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும். அதனால், மாணவர்கள் நன்றாக படித்து முழு மதிப்பெண் பெற வேண்டும்.
வித்யா டோயல் (ஆங்கிலம்):வினாக்களை நன்கு கவனமாக நிதானமாக படிக்க வேண்டும். விடையளிக்கும் போது வினா எண்களை கவனமாக குறிக்க வேண்டும்.ஒவ்வொரு பாடத்தின், அருஞ்சொற்பொருள், எதிர்ச்சொல் பகுதியை நன்றாக படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்தின் பின்புறமுள்ள பயிற்சி பகுதியை நன்றாக படிக்கவும். விடையளிக்கும் போது, எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும்;
வினாக்களுக்கு தெளிவாக சரியான விடையளிக்க வேண்டும். இலக்கண வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். கட்டுரைப்பகுதிகள் இல்லாததால், பாராகிராப் வினாக்கள் மட்டுமே உள்ளது. செய்யுள் பகுதியை நன்றாக படிக்க வேண்டும். மொழிமாற்ற வாக்கியங்களை எழுதும் போது, சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். இரண்டாம் தாளில், பெருவினாக்கள் எழுதும் போது, தலைப்பு அவசியமாகும். ஆங்கில பாடத்தை கவனமுடன் படித்தால், நூறு மதிப்பெண் பெறலாம்.
கீதா (கணிதம்): கணக்குகளில் வெண்படம் சார்ந்த கணக்குகளையும், அணிகள், நிகழ் தகவு மற்றும் புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் தொகுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக பார்க்க வேண்டும். செய்முறை வடிவியலில் உள்ள மூன்று பயிற்சிகளில், ஏதேனும் இரண்டு பயிற்சிகளையும்; வரைபடம் 10.2 உள்ள எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி கணக்குகளை படித்தாலே 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று விடலாம்.
முழு மதிப்பெண் பெற வேண்டுமானால், அனைத்து பாடங்களையும் ஒரு முறைக்கு இரு முறை போட்டுப்பார்க்க வேண்டும். பாடங்கள் 2,3,5,8 படித்தால் மட்டுமே கட்டாய வினாக்களுக்கு பதில் அளிக்க முடியும். "கிரியேட்டிவ்" வினாக்களும் கேட்கப்படும்; அதற்கும் மாணவர்கள் தயாராக வர வேண்டும். கணிதத்தை பலமுறை செய்து பார்த்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.
சிகாமணி( இயற்பியல்): வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு உரிய பதிலை எழுத வேண்டும். ஒருவரியில் விடையளிக்கக்கூடாது. வரைபடம் நன்றாக வரைய வேண்டும். கணக்கு வினாக்களுக்கு விடையளிக்கும் போது, பார்முலா எழுத வேண்டும். விடையளிக்கும் போது, முக்கியமான தகவல்களை எழுத வேண்டும்.
செய்முறை தேர்விற்கு 25 மதிப்பெண்களும், எழுத்து தேர்விற்கு 75 மதிப்பெண்களும் உள்ளன. எனவே, செய்முறை தேர்விற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். விதிகளை வார்த்தைகள் மாறாமல் எழுத வேண்டும். இயற்பியல் பாடம் புரிந்து படித்தால், கடினமானதாக தெரியாது. இயற்பியல் பாடத்தில் எழுத்துப்பயிற்சி அவசியமாகும்.
ஜெயந்தி (உயிரியியல்): உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது மிகவும் எளிது. படங்களைவரைந்து பாகங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். வினாக்களின் உட்பிரிவு எண்களை சரியாக எழுதுவதுடன், அனைத்தையும் எழுத வேண்டும். 1,2,4,7 பாடங்களை படித்தால், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முடியும். புரிந்து படித்தல் பயிற்சி மற்றும் திட்டமிடல் இருந்தால் அறிவியலில் எளிதாக 100 மதிப்பெண் பெறலாம்.
கீதா ( சமூக அறிவியல்):பெருவினாக்களுக்கு எழுதும் போது "பாயிண்டாக" எழுத வேண்டும். ஆண்டு கேட்கப்படும் வினாக்களுக்கு ஆண்டுகள் சரியாக குறிப்பிட வேண்டும். முக்கியமான பாயிண்டுகளை கோடிட்டு காட்ட வேண்டும். பாடப்புத்கத்தை நன்றாக படிக்க வேண்டும்.
புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களையும்; பாடத்தில் உள்ள முக்கியமான பாயிண்டுகளை கோடிட்டும் படித்துக்கொள்ள வேண்டும். காலக்கோடு வினாக்களுக்கு ஆண்டு நிகழ்வுகள், அளவுத்திட்டம் எழுதப்பட வேண்டும்.
ஆண்டுகளை திரும்ப திரும்ப நினைவுப்படுத்திக்கொண்டேயிருந்தால், அவை மறக்காமல் நினைவில் நிற்கும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் வரலாறு பாடத்தில், அலகு 1,2,3,7,8 ஆகியவற்றிலிருந்தும், குடிமையியலில், 1,3 அலகிலிருந்தும்; புவியியலில், 1,2,3,5 ஆகிய அலகுகளிலும்; பொருளியியலில் 1 அலகிலிருந்தும் கேட்கப்படும். இதனை நன்றாக படித்துக்கொள்ள வேண்டும்.
"மேப்" எழுதும் போது உரிய இடத்தில் திசைகள் குறிப்பதுடன், புள்ளிகள் வைத்து குறிக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. சமூக அறிவியலை நன்றாக படித்தால், எளிதாக 100 மதிப்பெண் பெற முடியும்.
ஆங்கில வழி: பாலசுந்தர்(கணிதம்)கடினமான பாடப்பிரிவுகளை முயற்சிமற்றும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கையெழுத்தின் அழகும், தெளிவும் மதிப்பெண்களை கூடுதலாக்கும். தேர்வில் ஒவ்வொரு வினாக்களுக்கும் விடையெழுத குறிப்பிட்ட நேரம் வகுத்துக்கொள்ள வேண்டும். கணக்குகளை மனப்படாம் செய்யாமல் எழுதிப்பார்க்க வேண்டும்.
கணிதப்பாடத்தை கண்டு அச்சம் கொள்ளாமல் முறையான பயிற்சியுடன் எதிர்கொண்டால், அதிக மதிப்பெண்கள் பெறலாம். கணிதப்பாடத்தை கேட்டு புரிந்து கொள்ளும் திறன், அதன் அர்த்தத்தை உள்வாங்கும் திறன் கொண்டிருந்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
உஷாராணி (சமூக அறிவியல்):வினாத்தாளை வாங்கியதும் நன்றாக படிக்க வேண்டும். எளிமையாக மதிப்பெண் பெறும் வினாக்களுக்கு முக்கியத்துவம் தரல் வேண்டும். முக்கியமான நிகழ்ச்சிகள், ஆண்டுகள், தலைவர்கள் உடன்படிக்கைளின் பெயர்கள் வரும் போது மறக்காமல் கோடிட்டு எழுத வேண்டும்.
கதையாக எழுதாமல் பாயிண்டு போட்டு எழுதவும். இரு மதிப்பெண்கள் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, இரண்டு அல்லது மூன்று பாயிண்டுகள் மட்டும் எழுதினால் போதுமானது. "பெலிகன்&' பேனாவை பயன்படுத்தக்கூடாது.சமூக அறிவியல் பாடத்தில், வெற்றி பெற வேண்டுமானால் பயிற்சி, முயற்சி இவைகளுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடக்க வேண்டும். பதட்டப்படாமல், நிதானமாக நம்பிக்கையோடு தேர்வு எழுதினால், சமூக அறிவியலில் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.