Pages

Saturday, June 15, 2013

31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு

தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. மொத்தமுள்ள, 69 அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை, எம்.பில்., - பி.எச்டி., படிப்புகளை கொண்டு, கிரேடு-1 கல்லூரிகள் என்றும், கிரேடு-2 கல்லூரிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 32 கல்லூரிகள், கிரேடு-1 தகுதியையும், 37 கல்லூரிகள், கிரேடு-2 தகுதியையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரேடு -1 தகுதியுள்ள, 32 கல்லூரிகளில், 20 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிரேடு - 2 கல்லூரிகளில், 11 கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள, 69 முதல்வர் பணியிடங்களில், 31 பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள், பெரிதளவு முடங்கியுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகள், உயர்கல்வி துறையில் நீண்ட காலமாக தேங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க செயலர் பிரதாபன் கூறியதாவது:

அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக வைத்திருப்பதால், கல்வி மற்றும் நிர்வாக பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பொறுப்பு முதல்வர்கள், நிலைமையை பெருமளவு சமாளித்து வருகின்றனர். தற்போது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான எந்த ஒரு முடிவையும், பொறுப்பு முதல்வர்களால், தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கல்லூரி பணிகள் குறித்த, ஒவ்வொரு முடிவும் எடுக்க, நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டிய உள்ளது. அதனால், நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. முதல்வர் பணியிடங்களை, கல்லூரி திறப்பதற்கு முன் அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு பிரதாபன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.