Pages

Tuesday, May 28, 2013

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்

"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத் தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால்,
அதிகாரம் இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தொடர்பாக, கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவில், "இந்த அமைப்பு, ஆலோசனை வழங்கும் அமைப்பு தான். எந்தப் பாடப் பிரிவை துவக்க வேண்டும் என முடிவு செய்யும் அமைப்போ அல்லது, தன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளின் செயல்பாட்டை தடை செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்போ அல்ல" என உத்தரவிட்டது.

மேலும், "எம்.சி.ஏ., என்பது, தொழில்நுட்ப பாடம், எம்.பி.ஏ., பாடம், தொழில்நுட்ப பாடமல்ல. எனவே, எம்.பி.ஏ., பாடப் பிரிவுக்கு அனுமதி அளிப்பதை, ஏ.ஐ.சி.டி.இ.,யால் நிர்ணயிக்க முடியாது" எனவும் உத்தரவிட்டது. இதனால், நாட்டின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும், ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பின் அதிகாரம் குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தலைமையில், அத்துறை அதிகாரிகள் நேற்று கூடி, அவசர சட்டம் பிறப்பிப்பது என முடிவு செய்தனர். அது குறித்த தங்களின் பரிந்துரையை, சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்குப் பிறகு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். விரைவில் பிறப்பிக்கப்படும், அந்த அவசர சட்டத்தில், எந்தெந்த தொழில்நுட்ப கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற வேண்டும், எந்தெந்த படிப்புகள், ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில் வரும் என்பன போன்ற அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும் என, மத்திய மனித வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.