Pages

Monday, January 9, 2017

பா.வளர்மதிக்கு ஏன் பாடநூல் கழகம்? -மாஃபா.பாண்டியராஜனுக்கு கார்டனின் செக்?! விகடன்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. ' அமைச்சருக்கும் துறையின் உயர் அதிகாரிக்கும் சமீப நாட்களாக முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாகவே, பாண்டியராஜனின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் வளர்மதியின் கைக்கு அதிகாரம் சென்றது ' என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சகராக பொறுப்பேற்கின்றவர்களே, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் பதவி வகித்து வந்தனர். முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர்.

 அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனா சம்பத், பாடநூல் கழகத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
' அமைச்சர் பதவி ஒருவரிடமும் பாடநூல் கழக தலைவர் வேறு ஒருவரிடமும் இருப்பதால், நிர்வாகரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன' என்பதால், துறை அமைச்சரிடமே இந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வளர்மதியிடம் பாடநூல் கழகத் தலைவர் பதவி சென்று சேர்ந்துள்ளது.

 " தமிழக அமைச்சர்களில் மாஃபா. பாண்டியராஜனின் செயல் திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் உள்பட கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு யாருடைய அனுமதியையும் அவர் கேட்பதில்லை. அதேபோல், சீனியர் அமைச்சர்களையே பெயர் சொல்லித்தான் அழைக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து பாடநூல் கழகப் பதவியை பதம் பார்த்துவிட்டன. 

பள்ளிக் கல்வித்துறையில் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. அடுத்த மாதம், விலையில்லா பொருட்களான மிதிவண்டி, புத்தகப் பை, புத்தகம், கிரேயான்ஸ், காலணிகள், உல்லன் சுவெட்டர்கள், செயல்வழிக் கற்றல் உபகரணங்கள் என ஆயிரம் கோடி ரூபாய்க்கான பிரமாண்ட திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளன. ' இந்த நேரத்தில் பாண்டியராஜன் இருப்பது அவசியமற்றது' என அதிகாரிகள் நினைக்கிறார்கள்" என விவரித்த கல்வி அதிகாரி ஒருவர்,


" பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையில் சமீப காலங்களாக உரசல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. 

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரையில், ' ஆன்ட்டியிடம் பேசிக் கொள்கிறேன்' என அமைச்சர்களை அடக்கி வைத்திருந்தார் அந்த அதிகாரி. இதனாலேயே, பள்ளிக் கல்வி அமைச்சர்கள் துறை அதிகாரியிடம் பவ்யத்தோடு வலம் வந்தனர். ஆனால் பாண்டியராஜனோ, ' நான் சொல்வதை செயல்படுத்துங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனை துறையின் உயர் அதிகாரி ரசிக்கவில்லை. இதைவிட, மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஏழைக் குழந்தைகள் கணிப்பொறி கல்வி கற்பதற்காக ஐ.சி.டி எனப்படும் ஒருங்கிணைந்த கணிப்பொறி பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 900 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஐந்தாண்டுகளாக நிதியை செலவிடாமல் தள்ளாட்டத்தில் வைத்திருந்தனர் அதிகாரிகள். இந்தப் பணியை எடுத்துச் செய்வதற்காக வந்த நிறுவனங்கள், அதிகாரியின் அழுத்தத்தால் பின்வாங்கிவிட்டன. ஒருகட்டத்தில், நிதியைத் திருப்பி அனுப்பும் வேலைகள் தொடங்கின.
இதனை அறிந்த அமைச்சர் பாண்டியராஜன், ' ஐ.சி.டி திட்டத்தால் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்' என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வாங்கிவிட்டார். ' 

கணிப்பொறி தொடர்பான கல்வி என்பதால், எல்காட் வசம் பணிகள் ஒப்படைக்கப்படுவதைவிட, பள்ளிக்கல்வித்துறையே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும்' என அதற்கான பணிகளில் இறங்கினார். மீண்டும் ஐ.சி.டி கொண்டு வரப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்தார் துறை அதிகாரி. ' ஐ.சி.டியை முன்வைத்து நடந்த விஷயங்கள் தெரிந்துவிடும்' என்பதால், சில ஐ.ஏ.எஸ்கள் துணையோடு கார்டன் வட்டாரத்துக்கு தகவல் அனுப்பினார். ' யாரைக் கொண்டு வருவது' என பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ' அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்' என்பதை உணர்ந்தே, அவருக்குப் பதவியைக் கொடுக்க வைத்துள்ளனர்" என்றார் விரிவாக.


" கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு ஆதாரபூர்வமாக தகவல் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. 

லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலரும், ஒரே துறையில் நீண்டகாலம் அமர்ந்து கோலோச்சுகின்றனர். கடகடந்த இரண்டு ஆண்டுகளில் விலையில்லா புத்தகப் பை, காலணி தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கினர். 

பாடநூல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக, மூன்று கோடி ரூபாய் செலவில் மறு அச்சடிப்பு பணிகளைச் செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகவும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் டெண்டரை வழிநடத்தும் முடிவில்தான் இதுபோன்று முடிவு எடுத்திருக்கிறார்கள்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

" அ.தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து வாரியம் உள்பட பல்வேறு பதவிகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பாடநூல் கழகத்துக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதன் மூலம், அமைச்சரின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படியே டெண்டர்கள் கோரப்படுகின்றன. தகுதியில்லாத நிறுவனங்கள் தேர்வாகும்போதுதான் மறுடெண்டர் கோரப்படுகிறது. மற்றபடி, வளர்மதியின் நியமனத்தை அரசியல் ஆக்குவது அர்த்தமற்றது" என்கிறார் பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர்.

- ஆ.விஜயானந்த்..
விகடன் இணையம்...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.