Pages

Wednesday, August 31, 2016

சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


ஒரு மாதத்திற்கு மேலாகியும், தரவரிசைப் பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்ட, எந்த தொடர் நடவடிக்கைகளும் நடக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அங்கீகார அமைப்பான, ஆயுஷ் கவுன்சில் அனுமதி தர வேண்டும்; கல்லுாரிகளை ஆய்வு செய்து, இந்த அனுமதி தரப்படும். 

இதுவரை அரசு கல்லுாரிகளுக்கு கூட, அனுமதி கிடைக்கவில்லை; தற்போது தான், கல்லுாரிகளில் உள்ள வசதிகள் குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. வழக்கமாக, செப்., மாத இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும். இதுவரை கல்லுாரிகளில் ஆய்வுகள் முடியாததால், செப்., மாதத்திற்குள், கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர் சேர்க்கையை விரைவாக முடிக்க, முயற்சித்து வருகிறோம். ஆனால், கல்லுாரிகளில் ஆய்வுப் பணி, இப்போது தான் துவங்கி உள்ளது; ஆய்வு முடிந்து, அனுமதி கிடைக்க வேண்டும். இதனால், செப்., மாதத்தில் கலந்தாய்வு நடத்துவது சிரமம்; அக்., மாதத்தில் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.