Pages

Wednesday, September 9, 2015

இணையத்தில் இணைந்தால் இனி மின் இணைப்பு பெறுவது சுலபம்

இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார்.


தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும்.


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, விண்ணப்பம் வழங்கிய, 30நாட்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்தவேண்டும் எனில், 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், விண்ணப்பித்து, பல நாட்கள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல், மின் வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் வாங்கிய பின்னரே, மின் இணைப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, புதிய மின் இணைப்பிற்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்திட்டத்தை செயல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது, இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.



தீபாவளி பரிசு இது:

எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரிய பிரிவு
அலுவலகத்தில், புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பத்தை கொடுத்தால் அதை வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் அடிப்படையில், மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால்
ஊழியர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், மின் இணைப்பு தருவதாக புகார் வந்தது. அதனால், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை, மின் நுகர் வோருக்கு, தீபாவளி பரிசாக, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


என்ன பயன்?

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். குறிப்பிட்ட தினங்களுக்குள், மின் இணைப்பு பெற முடியும். தாமதமானால், அதற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள முடியும். மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டம், ஏற்கனவே துவக்கப்பட்டு உள்ளது. இதனால், மின் நுகர்வோர் பலர், கட்டண மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருக்காமல், கூட்ட நெரிசலில் சிக்காமல், தங்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே, மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.