Pages

Monday, September 14, 2015

தமிழக அரசின் மொத்த வருவாயில் கல்விக்காக ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் மொத்த வருவாயில் ரூ.24 ஆயிரம் கோடி கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார். தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியின் 50ஆவது ஆண்டு விழா 4 நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, திருஇருதய சகோதரர் சபை அதிபர் விக்டர்தாஸ், ஆஞ்சலோ மாநில அதிபர் எட்வர்ட் பிரான்சிஸ், மாவட்ட அ.தி.மு.க. செயலரும், கம்பம் நகர் மன்றத் தலைவருமான டி.சிவக்குமார், தேனி மக்களவை உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் ரேமண்ட், தலைமை ஆசிரியர் பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர்.


விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமலாலய புதிய பொன்விழா கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டில் மொத்த நிதி வருவாயில் ரூ.24 ஆயிரம் கோடி கல்விக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்து,மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் செய்ய முடியாததை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று அவர் பேசினார்.

விழாவில், பொன்விழா மலரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.