Pages

Tuesday, May 19, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.


அதன்படி, இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 23, 2010-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களையே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நியமிக்க வேண்டும். எனினும், இந்தச் சட்டப்பிரிவுகளை அமல்படுத்த 5 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. 


இந்த நிலையில், ஏப்ரல் 1, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தப் பணி நியமனத்துக்கு தாற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பணியாற்றிய காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதே உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. எனினும், இந்த ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கில் தனி நீதிபதியின் இந்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23-இல் நடைமுறைக்கு வந்தாலும், தமிழக அரசு இந்தச் சட்ட விதிகளை நவம்பர் 15, 2011-இல்தான் வெளியிட்டது.

இப்போது, அந்த தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வழக்குகளால் தாமதம்: கடந்த 2013, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த வழக்குகள் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்த வழக்குகளை விரைவில் முடித்து, இந்த ஆண்டிலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.