'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில் உள்ள விவரம்:
மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை சட்டம் வழங்குகிறது. பணியின் போது ஊனமுற்றால், அவரை எந்த நிறுவனமும் வெளியேற்றக் கூடாது என, சட்டம் கூறுகிறது. அதனால், மருத்துவ ரீதியிலோ அல்லது ஊனம் காரணமாகவோ, அரசு பணியாளர் ஓய்வு பெற விரும்பினால், அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, தொடர்ந்து அதே ஊதியமும்,
சலுகைகளும் கிடைக்க உறுதி அளிக்க வேண்டும். அவர் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும். அதையும் மீறி, ஒருவர் பணி ஓய்வு பெற விரும்பினால் மட்டுமே, அவரது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். உடல் ஊனத்தை காரணமாக கூறி, தகுதி குறைப்பு செய்யக் கூடாது. மாற்றுத் திறனாளி என்பதற்காகவே, அவருக்கான பதவி உயர்வை மறுக்கக்கூடாது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், பலர், தன் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். அதனால், இச்சட்டம் குறித்து மாற்றுத் திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.