Pages

Tuesday, December 23, 2014

வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு அவர்களுடைய வளர்ச்சியில் பள்ளி பருவம் ஒரு முக்கியமான பருவமாகும். இப்பருவத்தில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதால் உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக அநேக ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்துவதால் காது, இருதயம் மற்றும் மூளை பகுதிகளில் தளர்வு ஏற்படுவதாகும். நரம்பு சார்பான தொல்லைகள் ஏற்படுவதாகவும் இக்கோளாறுகளினால் பள்ளி மாணவர்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய ஞாபக சக்தி குறைவதாகவும், கண்பார்வை மங்குவதாகவும், காதுகளில் கேட்கும் திறன் குறைவதாகவும், இளம் வயதிலே மாரடைப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு உற்று நோக்குதிறனும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தீய வழிகளில் செல்வதை தவிர்க்கவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிளஸ்–2 முடிக்கும் வரை செல்போன் உபயோகிக்கப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்விதிமுறைகளை மீறி செயல்படும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளையும் மற்றும் அவர்களுடைய புத்தகப்பை போன்ற ஆவணங்களை நன்கு ஆராய்ந்து பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் எதிரில் செல்போன் பேசுவதை தவிர்த்து மாணவர்கள் நலனை பாதுகாக்க ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வறிவுரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.