போலீஸ் துறை பரிந்துரைத்த, பாதுகாப்பு விதிமுறைகளை, அரசு பள்ளிகளில், இன்னும் நடைமுறைபடுத்தாதது குறித்து, அரசுக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வன்கொடுமை:பெங்களூரு, மாரத்தஹள்ளி விப்கியார் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பின், படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, சில விதிமுறைகளை பள்ளிகள் அமல்படுத்த வேண்டும் என, போலீஸ் துறை உத்தரவிட்டது.அனைத்து பள்ளிகளுக்கும் விதிக்கப்பட்ட, இந்த விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் கடைபிடிக்காதது குறித்து, தனியார் பள்ளிகள், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தன.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி வேணுகோபால கவுடா, போலீஸ் துறை, அனைத்து பள்ளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொதுவாக உத்தரவிட்ட விதிமுறைகளை, அரசு பள்ளிகள், ஏன் ஏற்க மறுக்கின்றன என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு, அரசு வழக்கறிஞர் பதிலளிக்கையில், 'போலீஸ் துறை குறிப்பிட்டபடி, அரசு பள்ளிகளில் அடையாள அட்டை வழங்கவும், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தவும், 13 கோடி ரூபாய் செலவாகும். இவை, விரைவில் செயல்படுத்தப்படும்' என்றார்.
சுமையல்ல:இதில் சமாதானமடையாத நீதிபதி வேணுகோபால கவுடா கூறியதாவது:அன்ன பாக்யா, மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற, அரசுக்கு பணம் இருக்கும்போது, பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக, 13 கோடி ரூபாய் செலவிட, பணம் இல்லையா; அரசு துறைகளுக்கு உள்ளேயே பலவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் முதலில் அரசு கவனம் செலுத்த முன்வர வேண்டும். 13 கோடி ரூபாய் என்பது அரசுக்கு பெரும் சுமையல்ல.
இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதற்காக, தனியார் பள்ளிகளுக்கு, அக்., 31ம் தேதி வரையிலும், அரசு பள்ளிகளுக்கு, நவ., 30ம் தேதி வரையிலும், கால அவகாசம் கொடுப்பதாக நீதிமன்றம் அறிவித்து, ஒன்றரை மாதமாகிறது. இன்னும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என, தெரிகிறது.தனியார் மற்றும் அரசு துறையினர், இருவருமே, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில் இன்னமும் தயக்கம் காட்டுவது ஏன்; இந்த விதிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, போலீஸ் துறை மட்டுமே கண்காணித்தால் போதாது.அரசு, கூடுதல் தலைமை செயலர் பதவி அந்தஸ்திலுள்ள அதிகாரிகள், துறை செயலர் கொண்ட கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.