Pages

Thursday, October 30, 2014

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் : பள்ளி கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை

அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த, கோபி என்பவர், தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில், அரசு பள்ளிகளில், ஆய்வக உதவி யாளர் பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது, நேரடி தேர்வு மூலம், 4,393 காலியிடங்களை நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 3ம் தேதி, அரசு பள்ளிகளில் உள்ள, ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவது என, பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிக்கை வெளியானது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்களில், தகுதியான நபர்களின் பட்டியலைப் பெற்று நிரப்ப உள்ளனர். இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது தெளிவாகிறது. பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்தோ அல்லது வேறு எந்த வழியை பின்பற்றியோ, தேர்வு செய்யப் போவதில்லை. பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவழைக்காமல், வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே, பணியிடங்களை நிரப்புவது என்பது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.
வெளிப்படையாக விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவழைத்தால், நான் பரிசீலிக்கப்படுவேன்.
எனவே, வேலைவாய்ப்பகம் மூலம், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும். வெளிப்படையாக விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, நியமிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், ஆனால், மனு மீதான விசாரணை முடியும் வரை, தேர்வை இறுதி செய்யக் கூடாது என்றும், நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு 'நோட்டீஸ்' அனுப்பவும், நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.