Pages

Wednesday, September 3, 2014

உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கடும் ஊழியர் பற்றாக்குறை - அவதியில் ஆசிரியர்கள்

வத்திராயிருப்பு உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், பணியாளர்கள் யாரும் இல்லாததால், அங்கு வேலை நிமித்தமாக செல்வோர் பலமுறை அலைந்து, தாங்களே அப்பணிகளை செய்து திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.


வத்திராயிருப்பு பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 68 உள்ளன. இவற்றையும், இதில் பணிபுரியும் 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் நிர்வகிப்பது, வத்திராயிருப்பில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம்.

ஆசிரியர்களுக்கான சம்பளம் பட்டுவாடா செய்தல், சேமநல நிதிக்கடன், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பல்வகை ஊக்க ஊதியம் வழங்குதல், மருத்துவ ஈட்டுத்தொகை வழங்குதல் உட்பட பல்வகையான பணப் பலன்களை வழங்குதல், விடுப்பு பதிவு ஆகியவற்றையும், ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன்கள் வழங்குதல் போன்ற அனைத்து பணிகளையும், இந்த அலுவலகம்தான் செய்து கொடுக்க வேண்டும்.

சொந்த கட்டடம்கூட இன்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில், துவக்கத்தில் பதிவறை எழுத்தகள், எழுத்தர்கள், உதவி எழுத்தர்கள், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் என 10 க்கு மேற்பட்ட பணியாளர்களும், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இருவர், கண்காணிப்பாளர் ஒருவர் என 3 அலுவலர்களும் பணியில் இருந்தனர். பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து, கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு பணியாளர்களே யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

தற்போது இரு தொடக்க கல்வி அலுவலர்களும், ஒரு கண்காணிப்பாளரும் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் அங்கு பணி நிமித்தமாக செல்லும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தாங்களின் சம்பளப் பட்டியலை பதிவு செய்வதற்கு கூட, பணியாளர்கள் இல்லாததால், பலமுறை அலைந்து, தாங்களே அந்தப் பணிகளை மேற்கொண்டு திரும்ப வேண்டியுள்ளது. இதுதவிர, அலுவலக உதவியாளர்களோ, வாட்ச்மேன்களோ இல்லாததால் அங்கு செல்லும் ஆசிரியர்களையே, அதிகாரிகளுக்கு டீ வாங்குவதற்கும், அலுவலகத்தை சுத்தம் செய்யவும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

உயர் அதிகாரிகள் சொல்வதால் வேறு வழியின்றி, கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், கையில் கேனுடன் டீ வாங்க செல்கின்றனர். ஓய்வு பெற்றவர்கள் தங்களது பதிவேடுகள் குறித்த விபரங்கள் வேண்டி, மாதக்கணக்கில் நடையாய் நடந்தும் காரியங்கள் முடிவதில்லை. பெயர் கூற விரும்பாத தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "10 பேர் வேலை பார்த்த இடத்தில் 4 பேரையாவது பணியமர்த்த வேண்டாமா? வெளியே ஆய்வுக்கு செல்ல வேண்டிய உயர் அதிகாரிகள், ஆபீசில் உட்கார்ந்து கிளார்க் வேலை பார்க்கின்றனர். ஆசிரியர்கள் ஏதாவது வேலையாக அலுவலகம் சென்றால் அவ்வளவுதான்; வேலைக்குமேல் வேலை வாங்குகின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.