Pages

Tuesday, April 15, 2014

கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம்

"மக்களவைத் தேர்தல் முடியும் வரை, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பெறப்பட்ட கல்வி கடனுக்கான வட்டித் தொகை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.2,600 கோடியாக உள்ளது என்றும், அதனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைக்குத் தேர்தல் நடைபெறுவதால், அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "மக்களவைத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் இந்தத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது' என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.

மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 16ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குப் பிறகுதான் கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.