Pages

Tuesday, March 18, 2014

ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்!'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
1.4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்தாலும், இதனால், மாணவர்கள் சேர்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறையால் கொண்டுவர இயலவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடந்துவருகிறது.நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வியில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம், தமிழ் வழிக்கல்வியில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது.மாநிலம் முழுவதும், 3500 பள்ளிகளில் தற்போது, ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் கல்வியாண்டில், மேலும், ஒன்றியத்திற்கு 10 வீதம் 350 ஒன்றியங்களில், 3500 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி கட்டாயம் துவங்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 மாணவர்கள் இருந்தால் தான் ஆங்கில வழிக்கல்வியை துவங்க இயலும் என்பதால், மாணவர்கள் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களை சேர்க்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலாளர் வின் சென்ட் பால்ராஜ் கூறுகையில், ''ஆங்கில வழி சேர்க்கைக்கு, முன்னுரிமை கொடுக்க வலியுறுத்துவதால், தமிழ் வழியில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், ஆங்கில பிரிவுக்கு தனி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தற்போதைய ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத போது, இரண்டு பிரிவுகளையும் ஒரே ஆசிரியர்களே கவனித்து கொள்ளவேண்டும். இதனால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். கல்வித்தரத்தில், பெரிய மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை,'' என்றார்.

1 comment:

  1. தமிழாய்ந்த தமிழ் மகன் ஆண்டால் தமிழ் வளரும்.
    சர்ச்பார்க் படிச்சா இப்படிதான் இருக்கும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.