Pages

Monday, October 14, 2013

தனித்திறன் குறைபாடே வேலையின்மைக்கு காரணம்: பிரதமரின் ஆலோசகர் பேச்சு

"இன்றைய தொழில்நுட்ப உலகின் மாற்றங்களுக்கு தகுந்தவாறு இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம். தனித்திறன்குறைபாட்டின் காரணமாக பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது" என, பிரதமரின் ஆலோசகர் ராமதுரை பேசினார்.

கோவை எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யா பீட பல்கலையின் 10வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது. பிரதமரின் ஆலோசகர் (மத்திய திறன் மேம்பாடு) ராமதுரை, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:

"தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறையின் வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத அளவுக்கு பங்களிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.25 கோடி மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

ஆனால், தகுதியான வேலை பெறுவதற்கான திறன் குறைபாட்டால், வேலைவாய்ப்பு பெறுவது கடினமாகிறது. உற்பத்தி சந்தையில், பல்வேறு போட்டிகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

மத்திய அரசு உற்பத்தி துறையில், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆறு ஆண்டுகளுக்குள், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதுமையான சிந்தனைகளுடன் கூடிய 2 கோடி பேர் பணிக்கு தேவைப்படுவர். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்." இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த 4,385 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.