வைகைசெல்வனின் தலை உருண்டதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாவின் கைதான் ஓங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சபீதாவைச் சுற்றி இப்போது சர்ச்சைகள் றெக்கைக் கட்டத் தொடங்கியுள்ளன.
பள்ளிக்கல்வித் துறையில் மட்டுமே இதுவரை நான்கு அமைச்சர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதாவுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நடந்த பனிப்போர்தான் பதவி பறிபோனதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் முதலமைச்சர் அலுவலகத்தில் சபீதா பணியாற்றினார். ஜெயலலிதா காவிரி பிரச்னைக்காக திடீரென்று கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபோது, அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர் சபீதா. அதில் இருந்து ஜெயலலிதாவுக்கு சபீதா மீது நல்ல அபிப்ராயம். சபீதாவின் திருமணம் ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்தது. கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சபீதா நியமிக்கப்பட்டார். ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை சபீதா அறிவித்தார். அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'என் அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி அறிவிக்கலாம்?’ என்று கேட்க, விஷயம் பூதாகரமானது.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் சி.வி.சண்முகம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆனார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆட்சி மேலிடம் கருதியது. உடனே, சமச்சீர் கல்வியை நிறுத்தி சபீதா உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தி.மு.க. கோர்ட்டுக்குச் சென்றது. இதுபற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, 'தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்த நீங்களே, இப்போது சமச்சீர் கல்வி வேண்டாம் என்று உத்தரவு போட்டால், எல்லோரும் சிரிப்பார்கள். கோர்ட்டும் ஏற்றுக்கொள்ளாது’ என்றாராம்.
'கோர்ட்டில் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்’ என்ற சபீதா, பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கலாம் என்றாராம். 'அவசரப்பட வேண்டாம்’ என்று சி.வி.சண்முகம் சொல்ல... 'இல்லை சார்... மேம்கிட்ட (முதல்வர்) நான் பேசிக்கிறேன்’ என்று சபீதா சொல்லவும் வாயடைத்துப் போனாராம் சி.வி.சண்முகம். கடைசியில், இந்தப் பிரச்னையால்தான் சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு தோற்றது. இதோடு, சுமார் 50 கோடி ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்ட பழைய பாடத்திட்ட புத்தகங்கள் வீணானது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடந்தபோது தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த முத்து பழனிச்சாமி மீதும் விமர்சனம் எழுந்தது. இவரை இணை இயக்குனராக்க நியமிக்க முடிவெடுத்ததிலும் சபீதாவின் கைதான் ஓங்கியிருந்தது. இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், சி.வி.சண்முகத்தின் பதவி காலியானது.
அடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொஞ்ச நாட்களே தொடர முடிந்தது. அவருக்குப் பிறகு, சிவபதி வந்தார். அப்போதும் சபீதாவின் செல்வாக்கே ஓங்கியிருந்தது. முதல்வர் அலுவலகத்தில் சபீதாவுக்கு உள்ள செல்வாக்கால், அந்தத் துறைக்கு வந்த அமைச்சர்கள் பயந்து நடுங்கினர். சிவபதிக்குப் பின்னர் வைகைசெல்வன் வந்தார். கொஞ்ச நாட்களிலேயே சபீதாவுக்கும் அவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது. ஆசிரியர் கவுன்சிலிங்கில் அமைச்சர் தரப்பு கொடுத்த டிரான்ஸ்ஃபர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. சமீபத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் டிரான்ஸ்ஃபர்கள் செய்யப்பட்டனர்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த தேவராஜன் தொடரட்டும் என்று அமைச்சர் வைகைசெல்வன் சொல்ல. அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த இடத்துக்கு ராமேஸ்வர முருகனைக் கொண்டுவந்தார் சபீதா. மொத்தத்தில் கல்வித் துறையை சூப்பர் உமன் போல செயல்படுகிறார்'' என்றார்கள்.
இதுதொடர்பாக விளக்கம் பெற சபீதாவை தொடர்புகொண்டோம். ''நான் ஒரு அரசு அதிகாரி.
உங்களுக்கு ஏதாவது விவரங்கள் தெரிய வேண்டும் என்றால், முதல்வர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார் சுருக்கமாக. அவரது ஆதரவு அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஊழலுக்கு ஆதரவாக நடந்துகொண்ட அமைச்சர்கள் விஷயத்தில் கறாராக நடந்துகொண்டார் சபீதா. அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அவதூறு கிளப் புகிறார்கள்'' என்றார்.
சபீதாவுக்கு எதிராக தகவல்களைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அ.தி.மு.க. ஆதரவு தலைமைச் செயலக அதிகாரிகள். இதில் ஸ்குவாஸ் விளையாட்டு விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது.
- See more at: http://vannimedia.com/site/news_detail/23163#sthash.1c8kM5aq.dpuf
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.