Pages

Monday, April 15, 2013

உயர் கல்விக்கு ரூ.3,226 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத் தகவல்

"தமிழக அரசின் சார்பில் உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் சம்பத் கூறினார்.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், "உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காகத்தான் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறுவதற்காக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 117 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இது தவிர அரசு பொறியியல் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்ப கல்லூரி 2ம், கலைக்கல்லூரி 3ம் உள்ளன. இதில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.

அமைச்சர் சம்பத் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசுகையில், "முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 389 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையை அறவே ஒழிக்கவும், தொழில் துறையில் முன்னேற்றமடையச் செய்யவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் மாணவர்களின் பங்குதான் அதிகம் என்பதால்தான் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்படவுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.