Pages

Monday, March 11, 2013

இரவு நேரத்தில் குடி மையமாக மாறும் சுற்றுசுவர் இல்லா பள்ளி வளாகம்

மாகாண்யம் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்கு, சுற்றுசுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமுக விரோத செயல்களும், குடி மையமாகவும் பயன்படுகின்றன.
மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் மாகாண்யம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், 3ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சுற்றி அழகூர், மலைப்பட்டு சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது.

மாகாண்யம் கிராமத்தில், 800 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயம் முக்கியமான தொழில். கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலக கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகம், என, அனைத்தும் ஓரே வளாகத்தில் அமைந்துள்ளது.

இந்த வளாகத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால், இரவு நேரத்தில் யார் வேண்டுமானாலும், செல்லலாம். இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு, வளாகத்தில் இரவு நேரத்தில் மது குடிப்பதும், சீட்டு ஆடுவதும் வழக்கமாகி விட்டது. மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி வளாகத்தில், அனைத்து அலுவலகங்களும் உள்ளதால், பகல் நேரத்திலும், இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். பள்ளி வளாகத்தில், எப்போது பார்த்தாலும், ஆள் நடமாட்டம் உள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகின்றது.

கல்வி நிலையங்களை பாதுகாக்கவும், மாணவர்களின் நலனை காத்திடவும், சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.