Pages

Monday, March 4, 2013

அரசு கல்லூரி விடுதியில் சூரிய மின்சக்தி விளக்கு வசதி

 தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதிகளுக்கு சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்த ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையால், தொழில் துறையினர் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னையை உணர்ந்த தமிழக அரசு, அரசு கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்; தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தது. அப்பணிக்காக 60 கோடி ரூபாயும் ஒதுக்கியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிற்படுத்தப்பட்டோர், சமூக நலத்துறை விடுதிகளில் உள்ள மின்சார வசதி, மாணவர்கள் எண்ணிக்கை, அறைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, உடுமலை அரசு கலை கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்வசதி ஏற்படுத்த தலா மூன்று லட்சம் வீதம் ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில்,"சூரிய ஒளி மின்சாரம் பெறுவதற்கான கட்டமைப்பு, அரசு கல்லூரி விடுதிகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. எட்டு முதல் 15 விளக்குகள் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகின்றன" என்றனர்.

கடந்த 2012 துவக்கத்தில், அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்குகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.