Pages

Saturday, February 23, 2013

கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி

"தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட் பெற, டி.பி.ஐ., வளாகத்தில், குவிந்தனர். ஒரே நாளில், அதிக மாணவ, மாணவியர் திரண்டதால், ஹால் டிக்கெட் பெற முடியாமல், அவதிக்குள்ளாயினர்.
மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, தத்கால் திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, நேற்றும், இன்றும், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 1000 மாணவ, மாணவியர் குவிந்தனர். இவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்க, நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, கூட்டம் திரண்டதால், ஹால் டிக்கெட் வழங்குவதில், பிரச்னை ஏற்பட்டது.

ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைக்க முயற்சித்தார். அது நடக்கவில்லை. இதனால், அவர் சோர்ந்துபோய், ஓரங்கட்டினார். கடைசி நேரத்தில், அவசரம், அவசரமாக ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்னைக்கு காரணம் என, தேர்வர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு, 300 பேர் வீதம், 4,5 நாட்கள் வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.