Pages

Saturday, February 16, 2013

பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு

பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.
அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, புகார் அளிப்பதற்காக, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை சந்திக்க, பெற்றோர், சென்னைக்கு வரும் நிலை உள்ளது. இதனால், துறை இயக்குனரகத்தின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அமைப்பு சட்டத்தின் படி, பள்ளிகள் மீது, அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க, மாவட்டந்தோறும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், உறுப்பினர் - செயலராக இருப்பர்.

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், மெட்ரிக் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர் ஆகியோர், குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவிற்கு, புகாருக்கு உள்ளான பள்ளிகளில், ஆய்வு செய்யவோ, பறிமுதல் செய்யவோ, அதிகாரம் இல்லை. ஆனால், புகாரில் சிக்கும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு, சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, சம்பந்தபட்ட துறை இயக்குனர்களுக்கு, பரிந்துரை செய்யும்.

பரிந்துரையின் அடிப்படையில், சம்பந்தபட்ட துறை இயக்குனர்கள், முடிவு அறிவிப்பர். இந்தக் குழு, ஒவ்வொரு மாதமும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில், மாவட்ட தலைநகரத்தில் கூடி, புகார் மனுக்கள் குறித்து, விசாரணை நடத்தும்.

புகார் மனுக்கள் அதிகமாக வந்தால், சி.இ.ஓ., வசதிக்கு ஏற்ப, கூடுதலாக சில நாட்கள், விசாரணை நடத்தவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.