Pages

Thursday, February 14, 2013

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொடக்க பள்ளி - நாளிதழ் செய்தி

பொறையூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொறையூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை
தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோர் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளியின் முன்னாள் உள்ள விளையாட்டு மைதானத்தில், அப்பகுதி மக்கள் கால்நடைகளை கட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். மைதானப் பகுதியை, கிராம மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளியின் பின்புறம் முட்புதர்கள் வளர்ந்து, விஷப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், விளையாட்டு மைதானத்தில் விளையாடவே அஞ்சுகின்றனர். இரவு பள்ளி கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி எதிரில் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. ஆபத்தை உணராமல், அதில் மாணவர்கள் விளையாடுகின்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை. உதவி ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார். இதுகுறித்து, மேல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.