Pages

Monday, October 8, 2012

பள்ளிகளில் காப்பீடு கல்வித் திட்டம்: தமிழக ஆளுநர் தொடக்கி வைத்தார்

யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்வி திட்டத்தை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நேற்று தொடக்கி வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் காப்பீடு கல்வி குறித்த விழிப்புணர்வு சி.டி. மற்றும் புத்தகங்களை வழங்கி ஆளுநர் பேசியதாவது:

நாட்டில் 24 நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டிலும், 27 நிறுவனங்கள் பொது காப்பீட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. காப்பீட்டு துறையானது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் காப்பீடு மற்றும் அதன் பயன்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக காப்பீடு நிறுவனங்கள் பொதுமக்கள் சேவையில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே காப்பீடு உள்ளிட்ட நிதி பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாளைய நாட்டின் குடிமக்களான இன்றைய மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றார் ஆளுநர். காப்பீடு கல்வி விழிப்புணர்வு சி.டி. மற்றும் புத்தகங்களைப் பெற்ற பள்ளிகளில் கல்வியில் சிறந்து விளங்கிய 9 மாணவர்களுக்கு பரிசையும் ஆளுநர் வழங்கினார். மேலும், யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கிராமப்புற மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பள்ளி மாணவர்களிடையே காப்பீடு குறித்த கல்வியை பரப்ப இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பள்ளிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான சில உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.