Pages

Saturday, October 20, 2012

தமிழக பள்ளிகளுக்கு 6 மாதத்தில் கழிப்பிட வசதி - பள்ளிக் கல்வித்துறை செயலர்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்னும் 6 மாதத்தில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், சென்னையில் நேற்று நடந்த விசாரணையின் போது, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர், "தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிகளவிற்கு, குழந்தை உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன" என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின்படி, சம்பந்தபட்ட ஆசிரியரை, பணியில் இருந்து, "டிஸ்மிஸ்" செய்வதுடன், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், போதிய அளவிற்கு இல்லை என, ஆணைய தலைவரிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, "ஆறு மாதங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?" என, ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா கேள்வி எழுப்பினார்.

இதற்கு, பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறுகையில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களுக்குள், முழுமையான அளவில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.