பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். காலியாக உள்ள, 143 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை இணையதளம் வழியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று கலந்தாய்வு நடந்தது.
இதில், பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, 171 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 28 பேர், பதவி உயர்வை மறுத்து விட்டனர். மீதமுள்ள, 143 பேர், பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் பதவி உயர்வு உத்தரவு கடிதங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தர்மபுரி, நாகை, ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தான், அதிக காலிப் பணியிடங்கள் இருந்தன. சென்னையில், இரு பணியிடங்கள் இருந்தன. இதற்கு, 10 பேர் அழைக்கப்பட்டனர். ஐந்து பேர், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர்.
மீதமுள்ள ஐந்து பேரில், ஒருவர், ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தார். மற்றொரு காலி பணியிடத்தை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு செய்ததாக, முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறையில், சமீப காலமாக, பல்வேறு கலந்தாய்வுகள், "ஆன்-லைன்&' வழியாக நடந்து வருகின்றன. சமீபத்தில், 1,200 முதுகலை ஆசிரியர் நியமனம், ஆன்-லைன் வழியாக நடந்தது.
இந்த முறையால், ஆசிரியர்கள் அலைச்சலின்றியும், அவர்களின் போக்குவரத்து செலவு, துறை சார்பில் நடக்கும் இதர ஏற்பாடுகள் என, பல்வேறு பண விரயம் தடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.