சிறப்பாசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சேலம் ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலும், புதிய பணியிடங்கள் வழங்கப்படாமலும் இருந்தது.
கடந்த மாதத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, தமிழகம் முழுவதும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
காலியான சிறப்பாசிரியர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பதிவு மூப்பு அடிப்படையில், இசை ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு, தமிழகம் முழுவதும் 7,058 பேர் 1:5 என்ற விகிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, அந்தந்த மாவட்டங்களில் ஏப்ரல் 22, 23 தேதிகளில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பணி நாடுநர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று முன்தினம் காலை நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், ஓவிய ஆசிரியர்கள் 154 பேர், இசை ஆசிரியர் ஒருவர், தையல் ஆசிரியர் 18 பேர் சேர்த்து மொத்தம், 173 பேர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளாக நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 145 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment