டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சிடப்பட்ட, 8 லட்சம் விண்ணப்பங்களும், மூன்று நாட்களில் விற்றுத் தீர்ந்தன.
கூடுதலாக அச்சிடப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இன்று(27.03.12) அனுப்பப்படுகின்றன.
தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள் தேவைப்படுகின்றன. தருமபுரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற, நேற்று ஆசிரியர்களும், பட்டதாரிகளும் முட்டி மோதினர். இதனால், போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆசிரியர்களை போலீசார் அடித்து உதைத்தனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளாக்கில் விற்பனை: இந்த மாவட்டத்தில், பிளாக்கில், அதிக விலைக்கு விண்ணப்பங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கல்வித் துறையைச் சார்ந்தவர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருமே, இந்தச் செயலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற ஏழு மாவட்டங்களிலும், விண்ணப்பங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிடுவதால், என்ன செய்வது எனப் புரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் முழித்து வருகிறது. இதற்கிடையே, கூடுதலாக அச்சிடப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள், எட்டு மாவட்டங்களுக்கும் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இவை சென்றடைந்தால், தட்டுப்பாடு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி தேதியை நீட்டிக்க திட்டம்: பல மாவட்டங்களில் விண்ணப்பங்கள் தேவை அதிகமாக இருப்பதாலும், அனைவரும் விண்ணப்பிக்க போதிய அளவிற்கு கால அவகாசம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாலும் ஏப்., 4 என நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியை, மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, "கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாளில், இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்,'' என்றனர்.
"டோக்கன்' வழங்க உத்தரவு! வட மாவட்டங்களில், விண்ணப்பங்களை பெற வருபவர்கள், தினமும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, "டோக்கன்' வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வந்தவுடன், "டோக்கன்' எண்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த, டோக்கன்களை வாங்கவும், பல மாவட்டங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.