Pages

Wednesday, September 27, 2017

7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.




இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.


இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.


இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.


நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.