Pages

Saturday, December 17, 2016

ஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், திருமணம், குழந்தை பேறு, விபத்து, உள்ளிட்ட சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு ஆராய்ச்சிகளை தொடர மூன்றாண்டு கால ஊக்கத்தொகை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம் வழங்கப்படுகிறது. 

இந்த ஊக்கத்தொகைக்கு தேர்வு பெறும் பெண்கள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், ஆராய்ச்சி படிப்புகளை தொடரவும், மாதம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, மூன்று பிரிவுகளின் கீழ் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டம் பெற்ற பெண்கள் சமூக காரணங்களால் படிப்பை தொடர முடியாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் முதுநிலை முடித்து, இரண்டு ஆண்டுகள் இடைவெளியும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டுரையும் சமர்ப்பித்தால் போதுமானது. தமிழகத்தில், இதுபோன்று படிப்பை தொடர முடியாத பல பெண்கள் இருப்பினும், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை சார்ந்த விழிப்புணர்வு இல்லை. 

ஆனால், வடமாநிலங்களில் இதுகுறித்த விழிப்புணர்வுடன் அதிகப்படியான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை பிரிவில், விண்ணப்பிப்பவர்களின் பங்கு மிகவும் சொற்ப அளவில் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர் ரவி கூறியதாவது: 

ஆராய்ச்சி என்ற பிரிவின் கீழ், பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எம்.பில்., பி.எச்டி., போன்ற ஆராய்ச்சி படிப்பை அதிக அளவில் மாணவர்களே மேற்கொள்கின்றனர். திருமணம், மகப்பேறு போன்ற சமூக காரணங்களால் ஆராய்ச்சிகளில் பெண்கள் சாதிக்க முடிவதில்லை. இதன் காரணமாகவே, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வும், விண்ணப்பிப்பவர்களும் மிகவும் குறைவு. 27 முதல் 55க்குள் வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டும். இதுகுறித்த, விபரங்களுக்கு, 97897 74351 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.